இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு மீட்பு குழு!
இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மாபெரும் அழிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் சிறப்பு உத்தரவின் பேரில், பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் அவசர உதவி கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் மூலமாக, 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நிவாரண பணி
மேலும், பாகிஸ்தான் கடற்படை கப்பல்களும், உலங்கு வானூர்திகளும் ஏற்கனவே இலங்கையில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதியின் சிறப்பு கோரிக்கையின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அணுகுமுறை மற்றும் பாலங்களின் தற்காலிக மாற்றீட்டு பணிகளுக்காக பாகிஸ்தான் இராணுவம் தற்காலிக பாலங்களையும் அனுப்பவுள்ளது.
“இலங்கையின் சகோதர மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம்; மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் உறுதியாக இருக்கும், என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.