முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளி மீது மூர்க்கத்தனமான தாக்குதல் (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிணக்கு ஒன்று காரணமாக மாற்றுத்திறனாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மாற்றுத்திறனாளி சம்பவத்தில் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த 05.03.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் வசிக்கும் 15 வருடமாக இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில், துன்பப்படும் மாற்றுத்திறனாளியான கிறிஸ்துராசாவின் வீட்டுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் சக்கர நாற்காலியில் இருந்த குறித்த நபரை தாக்கி காலை அடித்து முறித்துள்ளனர்.
இதனை தடுக்க முற்பட்ட மனைவி மீதும் தாக்குதல் நடத்தியதில், மனைவியும் காயமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது உறவினருக்கும் இடையில் இருந்த காணிப் பிணக்கு தீர்க்கப்பட்டுள்ள நிலையில்,கடந்த 05.03.2022 திகதி பாதிக்கப்பட்ட நபரின் சகோதரரின் பிள்ளைகள் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது தாக்குதல் நடத்த வந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரையும் கைது செய்துள்ளதுடன், இவர்களை கடந்த 06.03.2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாற்றுத்திறனாளி மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதில் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தன்னை தாக்கிய அனைவரையும் கைது செய்யவில்லை.கைது செய்யப்பட்டவர்களும் வெளியில் வந்துள்ளார்களாம்.எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது.
குறிப்பாக தன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றும்,தன்னை கொன்ற பின்னர் குடும்பத்தில் உள்ள ஏனையவர்களையும் கொல்வோம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்,தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.