கம்மன்பிலவை விலகுமாறு கோரி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பது நாடகமில்லை - சாகர காரியவசம்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கடிதம் அனுப்பி விட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்ப்பது நாடகமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டுமென பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எழுத்து மூலம் கோரியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென கடிதம் அனுப்பியது மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லவா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன் போது அது நாடகமல்ல எனவும், கட்சியின் நிலைப்பாட்டையே தாம் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிக்கு தேவையானவாறு உதய கம்மன்பிலவை பதவி விலக்க ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி என்ற அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளின் விலையை குறைப்பதற்கு சந்தர்ப்பம் உருவாகியதும் நிச்சமயாக எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படும் எனவும் இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் உறுதிபடுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.