முல்லைத்தீவில் வெங்காய உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்: தீர்வுகள் பெற்றுத் தரக் கோரிக்கை
வெங்காய உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரேவிதமான பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனபோதும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் உரிய தரப்பினர் இதுவரை வெற்றி பெறவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
முதலீட்டுக்கேற்ற இலாபத்தினை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியாமை முதன்மை சவாலாக இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
திட்டமிட்ட முறையில் வெங்காய உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படவில்லை என்ற பலமான குற்றச்சாட்டு விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.
சந்தைப்படுத்தல்
உள்நாட்டில் வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முறையான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் போது சாதகமான விளைவுகளை பெறமுடியும்.
இறக்குமதியாகும் வெங்காயத்துடன் போட்டி போட்டு சந்தைப்படுத்தலை செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளூர் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விரும்பினால் செய்யுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்.எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வெங்காயமா? தாராளமாக இறக்குமதி செய்து நாம் நுகர்ந்து கொள்வோம்.
தேவைப்படுவோருக்கும் கொள்ளை இலாபத்தில் விற்றுக் கொள்வோம் என்ற மெத்தனப் போக்கிலேயே அரசாங்கம் இருப்பதாக வெங்காய விவசாயி ஒருவர் தன் ஆதங்கத்தினை பகிர்ந்து கொண்டார்.
உள்ளூர் செய்கையாளர்களை முறையாக வழிப்படுத்தப்படும் போது தரமான வெங்காயத்தை உள்ளூரில் விளைவித்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அதிகளவில் வெங்காயத்தை விளைவிக்கும் போது தன்னிறைவுக்கு மிஞ்சியதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள முயன்றால் நல்ல சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆயினும் பிராந்திய கமநல சேவைகள் திணைக்களமோ அல்லது பிரதேச செயலகங்களோ இது தொடர்பில் சிந்தித்து உருப்படியான செயற்திட்டங்களை இதுவரை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டதாக மக்களிடையே அவதானிக்க முடியவில்லை.
முல்லைத்தீவின் பல கிராமங்களிலும் நல்ல வெங்காய செய்கையாளர்கள் இருந்த போதும் அவர்கள் வெங்காய உற்பத்தியில் வினைத்திறனான முறையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பல வெங்காய விவசாயிகள் இப்போது வெங்காயத்தை பயிரிடுவதை விடுத்து வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பதையும் தேடலின் போது அறிய முடிகின்றது.
இத்தகைய போக்கு வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை தடுத்தவாறே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சந்தைப்படுத்தல் போட்டி
வடக்கில் யாழ் மாவட்டத்திலேயே அதிகளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு வருகின்றது.
அங்கு விளையும் வெங்காயம் சிறந்த விளைச்சலையுடையதாக இருக்கின்றது. அதிகளவிலும் உற்பத்தி செய்யப்பட்டு, யாழில் இருந்து ஏனைய இடங்களுக்கும் கொண்டு சென்று விற்கப்படுகின்றது என மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுவரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்து வெங்காயத்தின் வரவால் முல்லைத்தீவில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் பாரியளவிலான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
வெங்காய பயிர்ச்செய்கை தொடர்பிலான தொழில்நுட்ப அறிவு, மற்றும் சிறந்த பரிச்சயம் என்பவற்றுடன் பொருத்தமான உற்பத்திக் காலம் மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற விடயங்களில் யாழ்ப்பாணத்து விவசாயிகளைப் போல் முல்லைத்தீவு விவசாயிகள் இல்லை.
அதனால் போட்டியில் வெற்றியடைய அவர்கள் மேலும் பயிற்றுவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என விவசாயத்துறையில் பணியாற்றிவரும் துறைசார் நிபுணர் ஒருவர் இது தொடர்பில் அவரிடம் மேற்கொண்ட கேட்டல்களின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படும் மற்றும் இறக்குமதியாகும் வெங்காயத்தினால் உள்ளூர் வெங்காய உற்பத்தியாளர்களுக்கு தங்கள் உழைப்புக்கேற்ற இலாபம் கிடைக்காது மனமுடைந்துள்ளைதையும் அறிய முடிந்தது.
தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமா
முல்லைத்தீவில் பாரம்பரியமான முறைகளில் பாரியளவிலான விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் மக்களிடையே வீட்டுப் பொருளாதாரத்தினை ஈடு செய்து கொள்ள விவசாயத்தில் ஈடுபடும் அதிகளவான மக்கள் இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
அவர்களிடையே சிறப்பாக சில பயிர்களை தேர்ந்தெடுத்து பெரும் இலாபம் இட்டும் நோக்கோடு அவற்றை பணப்பயிராக பயிரிட்டு வருகின்றனர்.அவ் விவசாயிகளுக்கு வழிகாட்டல் ஆலோசனைகளையும், கண்காணிப்பு உதவியையும் விவசாயத்துறை சார் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.
தனிநபர் பொருளாதார மேம்பாடு தொடர்பில் விவசாயத்துறையில் உள்ள மக்களினை வினைத்திறனாக கையாளும் போது தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.