பயணத்தடையை மீறியதாக கைதானவர் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து மரணம்
நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதான நபர் ஒருவர், பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வடக்கு வத்தல்பொல பிரதேசத்தில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
42 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஓடும் வாகனத்திலிருந்து குதித்த போது படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் குறித்த நபரை அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
வத்தல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி உறவினர் வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் வண்டியில் ஏற்றி சென்ற போது அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கில் வாகனத்திலிருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.