காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு- கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேனி எனும் வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று(04) மாலை 6 ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பொட்டுக்குளம் வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி வேலுப்பிள்ளை வயது (59) என்பவரே பலியாகியுள்ளார்.
இவர் வழமைபோன்று வயல் வேலைகளை முடித்துவிட்டு தமது இருப்பிடம் நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காட்டுக்குள் இருந்து பிரவேசித்த யானையொன்று இவரைத் தாக்கியுள்ளது.
ஸ்தலத்திலேயே பலியான அவரது சடலத்தை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையிலான வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மக்களின் உதவியுடன் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் பற்றி வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும், யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கான யானை வேலிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.