மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து:ஒருவர் பலி(Photos)
மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (27.11.2022) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த நல்லராசா நேசராசா (வயது 46) ஆறு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்துடன் மோதுண்ட கார்
கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு கடற்றொழிலுக்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

