அம்பாறையில் 50க்கும் மேற்பட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது (Photos)
சுமார் 50க்கும் மேற்பட்ட லேகியம் எனும் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (25.02.2023) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்றைய தினம் மாலை நிந்தவூர் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

நீதிமன்றத்தில் முன்னிலை
இதற்கமைய, நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீம் ஆலோசனையில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன, பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் 50க்கும் மேற்பட்ட லேகியம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவராகக் கருதப்படும் 73 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர் உட்படச் சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
