தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்த தினேஷ் பிரியந்தவிற்கு மற்றுமொரு அதிஷ்டம்
டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவிற்கு அறிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் வீடமைப்பு திட்டத்திலிருந்து குறித்த வீட்டை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய உரிய வீடமைப்பு திட்டமொன்றை தெரிவு செய்து குறித்த வீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணாயக்காரவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த 50 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளதா ஏற்கனவே அறிவிக்கப்டப்பட்டிருந்தது.
அத்துடன் உலக சாதனைக்காக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளதுடன், இதற்கு மேலதிகமாக அவருக்கு 10 மில்லியன் ரூபா பணப் பரிசிலை வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம் எட்டியிருந்தது.
இதன்படி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தினேஷ் சுமார் 70 மில்லியன் ரூபா பணப் பரிசினை தன் வசமாக்கிய நிலையில் தற்போது வீடொன்றும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.