இலங்கையை உலுக்கிய கோர சம்பவம் - சூட்கேஸிற்குள் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் வயதான மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
79 வயதான மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
பியசமரா பகுதியைச் சேர்ந்த 79 வயதான கிரிளி சந்திரானி என்ற மூதாட்டியே கொல்லப்பட்டுள்ளார்.
கடுமையான துர்நாற்றம்
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 42 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் நேற்று பிற்பகல் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் உள்ள ஒரு அறையில் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலை பொலிஸ் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவ பொலிஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வீட்டில் பராமரிப்புப் பணி செய்ய வந்த 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிர போதைக்கு அடிமை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தீவிர போதைக்கு அடிமையானவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்தக் கொடூரமான கொலையைச் செய்து, பின்னர் அவரது உடலை சூட்கேஸில் மறைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பதில் நீதிபதி இந்திகா சில்வா மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரி எம். வி. பி. பிரமோத் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, முதற்கட்ட விசாரணைகளையும் நீதிபதி அளவிலான பிரேதப் பரிசோதனையையும் நடத்தினர்.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.