பார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும்: ஜனாதிபதி செயலாளர்
பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு இன்று (17.10.2022) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கொடி அணிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலக செலவில் பார்வையற்றோருக்கு 300 வெள்ளை பிரம்புகளைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பார்வையற்றோர் தேசிய சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்ரமசிங்க, இந்த சங்கம் அனைத்து மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வு
இதேவேளை, பெண்களுக்கான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒரு கிளையாக பார்வையற்ற பெண்களின் சங்கமும் மாற்றுத்திறனையுடைய இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இளைஞர் சங்கமும் இயங்கி வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் கமல்சிறி நாணயக்கார மற்றும் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




