சுற்றுலா பயணிகளால் குப்பை மேடாக மாறும் நுவரெலியா..!
சுற்றுலாத்தலமான நுவரெலியாவிற்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் ஏப்ரல் மாத முதலாம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டம் நடைபெறுவதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா தற்போது எங்கும் குப்பை குவியல்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்து காணப்படுகின்றது. மேலும் அதிகமாக சுற்றுலா பயணிகள் கூடும் மையங்களில் குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதுடன், இயற்கையும் பாதிக்கப்படுகிறது.
உரிய நடவடிக்கை
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, எஞ்சிய உணவுக் கழிவுகள், மாமிசங்கள், எலும்புத்துண்டுகள், பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள், எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்களை அதே இடங்களில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இவற்றை உட்கொள்ள கால்நடை விலங்குகள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றன
இதில் நாய்கள், பறவைகள், மட்டக்குதிரைகள் கழிவுகளை நாலாப்புறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதைகள் உட்பட நகரின் பல இடங்களும் மாசுப்படுகின்றது. குறிப்பாக கண்ட இடங்களில் கொட்டப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது இதில் அதிகமாக சவாரிக்கு பயன்படுத்தும் மட்டக்குதிரைகள் அதிகமாக உள்ளன.
இவை அவ்வப்போது குப்பை அதிக கிடக்கும் இடத்தில் இறந்து கிடப்பதும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளில் உள்ள மாசடைந்த பொருட்களை உண்பதும் காரணம் என தெரிய வந்துள்ளது.
குப்பை தொட்டிகள்
நுவரெலியாவில் தற்போது அதிக இடங்களில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களில் சேகரித்து கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அதிக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் புகை மண்டலம் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. மேலும் காற்று மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது
அத்துடன் பிரதான வீதியோரத்தில் நடப்பவர்களும் வாகனங்களில் வருவோரும் முகத்தை துணியால் மூடியும், மூக்கில் கை வைத்து செல்கின்றனர் இவற்றை நுவரெலியா மாநகர சபையோ கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
எனவே, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் தேவைக்கேற்ப குப்பைத் தொட்டிகளை வைப்பது அவசியம் எனவும் அப்பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






