அரசாங்கம் அனைத்தையும் அரசியல்மயப்படுத்துகின்றது! எதிர்கட்சி
அரசாங்கம் அனைத்தையும் அரசியல்மயப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அனைத்து விடயங்களையும் சுயாதீனமாக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இன்று அனைத்தையும் அரசியல்மயப்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் தீர்மானங்கள்
எதிர்வரும் காலங்களில் நிதி அமைச்சின் தீர்மானங்கள் பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி காரியாலயத்திற்கு தேவையான வகையில் எடுக்கப்படும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்து ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தனது நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஹர்சன சூரியப்பெருமவினை நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் அமர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சினை அரசியல்மயப்படுத்த போவதில்லை எனவும் அதனை சுயாதீன அடிப்படையில் நிர்வாகம் செய்வதாக கூறிய அநுர இன்று கொள்கைக்கு முரணாக செயற்படுகின்றார் என துசார இந்துனில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிதி அமைச்சின் செயலாளராக பீ.பி. ஜயசுந்தரவையும் மத்திய வங்கியின் ஆளுனராக அஜித் நிவாட் கப்ராலையும் நியமித்தமைக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்பொழுது பொருளாதாரம் பற்றிய துறைசார் நிபுணர்களை கவனத்திற் கொள்ளாது ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவரை நிதி அ அமைச்சின் செயலாளராக நியமித்தமை ஏற்புடையதல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.