ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த அரசாங்கம் முயற்சி : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிளினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய செய்திகளை வெளியிடும் தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் உண்மையில்லை என்றால் அரசாங்கம் அதனை உறுதி செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான எதிர்ப்பு
எவ்வாறெனினும் இந்த விடயம் உண்மையானால் அதுவே இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலம் என்பதனை ஜனாதிபதி நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சார்பின்றி முதுகெலும்புடன் தகவல்களை வழங்கும் ஊடகங்கள் சொற்ப அளவிலானவை எனவும் அவற்றை ஒடுக்குமுறைக்கு உட்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிடும் தனியார் ஊடகங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஆணைக்குழு நிறுவப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஊடகங்களை ஒடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை தணிக்கை செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலைவர் கடந்த காலங்களில் கூறிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்காக ஆணைக்குழு ஒன்று நிறுவப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள்
இந்த ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஊடகங்களும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் அணி திரள வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் கோரியுள்ளார்.
இதேவேளை, ஊடகங்ளின் உதவிடன் ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தற்பொழுது ஊடகங்களை அடக்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளாகளுக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தனியார் ஊடகங்கள் மீது கை வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை விடவும் வேகமாக அநுரகுமார திசாநாயக்க தோல்வியடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 15 மணி நேரம் முன்

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
