கொழும்பில் படையினருடன் மக்கள் தள்ளுமுள்ளு! தொடர்ந்தும் பதற்றம் (Live)
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் தடையை மீறி முன்னேற முயற்சித்து வரும் போதும் பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் இணைந்து அந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரரர்கள் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
ஆறாம் இணைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் போராட்ட பகுதியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டிருந்ததுடன் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது போராட்டக்காரர்களால்.
அத்துடன் அப்பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருவதாகவும் தெரியவருகிறது.
ஐந்தாம் இணைப்பு
கொழும்பு, புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்ட பேரணி கோட்டை புகையிரத நிலையத்தை அடைவதை தடுக்கும் வண்ணமே பொலிஸார் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைந்துள்ளதுடன், பாதையை விட்டு விலகுமாறும் வலியுறுத்தி வருகின்றதுடன் தடையை மீறி முன்னேற முற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை - புறக்கோட்டை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்டுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாபெரும் போராட்டத்தில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை மருதானை வீதிப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பு - மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அத்துடன் அங்கு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் ஆகியோர் திரண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - மருதானையில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்றுகூடியுள்ளனர்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இன்றைய தினம் பாரிய போராட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அம்பேபுஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு வந்துள்ள மக்கள் மருதானையில் ஒன்றுகூடியுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழலில் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








