வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்! மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு
வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதால் ஆவணங்களை இழந்த அல்லது சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (DMT) மாவட்ட ரீதியிலான நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரானதும், டிசம்பர் நடுப்பகுதியில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆவணங்களை வழங்குவதற்காக நடமாடும் சேவை
வெள்ளத்தினால் மக்கள் இன்னமும் சிக்கலான நிலையில் உள்ளதாகவும், பலர் தங்கள் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை மீட்டெடுக்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே, ஆவணங்களை இழந்தவர்களிடமிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்து, மாற்று ஆவணங்களை வழங்குவதற்காக இந்த நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும், சில வாகன உரிமையாளர்களால் தங்கள் வாகனங்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் உடனடி ஆதரவின் தேவையை எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலைமை சீரடைந்தவுடன் இந்தத் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.