கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் கொழும்பு 1 தொடக்கம் 15 வரையில் வசிப்பவர்களில் ஒரு கோவிட் தடுப்பூசியையேனும், பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, நடைமுறைப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒன்றிணைந்து இச்செயற்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் நபர்களை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிற்கு அழைத்துசென்று அவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தாமாக சென்று சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிலுள்ள நடமாடும் தடுப்பூசி மையத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.