திருகோணமலையில் சட்டவிரோத கடையை உடைத்து அகற்றுவதற்கான அறிவித்தல்
திருகோணமலை - டச்சுக்குடா கடற்கரையில் பெளத்த விகாரைக்கு அண்மித்து சர்ச்சைக்குரிய முறையில் அமைக்கப்பட்டு இயங்கி வந்த, சட்டவிரோத கடையை உடைத்து அகற்றுவதற்கான அறிவித்தல் இன்று (12) கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு உடைத்தல் கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.
இவ்வறித்தலின் படி இன்று முதல் 14 நாட்களுக்குள் இக்கடையை அமைத்தவர்கள் தாமாகவே இந்த நிர்மாணங்களை உடைத்து அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைத்து அகற்றும் அறிவித்தல்
குறித்த காலக்கெடு முடிந்த பின்னரும் நிர்மாணங்கள் அகற்றப்படாத பட்சத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் அவற்றை உடைத்து அகற்றும் எனவும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இடத்தில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே தமது திணைக்களம் உரிமையாளருக்கு அனுமதி வழங்கி இருந்தது.
ஆனால் அந்த அனுமதியை பயன்படுத்தி சட்டத்திற்கு முரணாக இங்கு நிரந்தர கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றுமாறு இதற்கு முன்னர் உரிய முறையில் உரிமையாளருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது.
மேன்முறையீடு செய்யலாமெனவும் அறிவிப்பு
இந்நிலையிலேயே இன்று உடைத்து அகற்றும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட நபர் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் எனவும் குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







