இலங்கையை சிவப்பு பட்டியலிருந்து அகற்றுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையை 'சிவப்புப் பட்டியலில்' இருந்து அகற்றுவதற்காக, கோவிட் தொற்றுக்களில் செயற்கை சரிவை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேலா குணவர்தன (Azela Gunawardena) இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கைகளை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
இலங்கையில் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை வீழ்ச்சியை உருவாக்கி, சிவப்பு பட்டியலில் இருந்து, நாட்டை நீக்க முடியும் என்ற செய்தி தவறானது.
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஒரு நாடு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படாது. அதற்கு ஏனைய அளவுகோல்களும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செப்டெம்பர் 22 புதன்கிழமை, முதல் தமது நாட்டின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே இலங்கை சுகாதார அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.