காவல்துறையினரின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை! அமைச்சர் விமல் ஆதங்கம்
கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தெடர்பில் திருப்தியில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி போன்றவர்கள் மீண்டும் சஹரான்களை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும், சாலி பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் அசாத் சாலி, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தீவிரவாதிகளுடன் எவ்வாறு தொடர்பு பேணியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நபர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் தீவிரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசாட் பதியூதீனின் சகோதரருக்கு பிணை வழங்கப்பட்டமை பாதுகாப்பு தரப்பின் விசாரணைகளில் காணப்படும் பலவீனங்கள் என்பதே தமது நிலைப்பாடு.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பிற்கு பொறுப்பான தரப்பினர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் உண்டு எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அது குறித்து அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுவதற்கு தயங்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.