உடன்படிக்கையில் கைச்சாத்திடமாட்டோம்: இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
உலக வரி இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (The Organization for Economic Co-operation and Development) இந்த உடன்படிக்கையை முன்னெடுத்து வருகின்றது.
இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 140 நாடுகளில் 136 நாடுகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இலங்கை, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் கென்யா ஆகிய உறுப்பு நாடுகள் மட்டும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.
இந்த உடன்படிக்கையின் மூலம் பல்தேசிய நிறுவனங்களிடமிருந்து குறைந்தபட்சம் 15 வீதம் வரி அறவீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு நாடுகளில் பல்தேசிய நிறுவனங்களிடம் வரி அறவீடு செய்யும் தொகையில் வேறுபாடு காணப்படுவதனால் சீரான ஓர் தொகையில் வரி அறவீடுகளை மேற்கொள்ள இந்த உடன்படிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 90 வீதம் பங்களிப்புச் செய்யும் நாடுகள் அனைத்தும் கையொப்பமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடுகளில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் ஆண்டு தோறும் சுமார் 125 பில்லியன் டொலர்களை நாடுகளுக்கு வரியாகச் செலுத்துகின்றன.
அந்தந்த நாடுகளில் நியாயமான அளவு வரியை இந்த பல்தேசிய நிறுவனங்கள் வழங்குவதனை உறுதி செய்யும் நோக்கில் இந்த வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜீ20 அமைப்பில் அங்கம் வகிக்கும் பெரிய பொருளாதாரத்தை உடைய அனைத்து நாடுகளும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
எனினும், இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டும் இதுவரையில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.