வடக்கு கல்விப்பணிப்பாளர் ஒரு பகுதியினரை காப்பாற்றவே வெளிமாவட்ட ஆசிரிய இடமாற்றத்தை இழுத்தடிக்கிறார்: ஜோசப் ஸ்டாலின்
'வடமாகாண கல்வி அதிகாரிகளின் பக்கச்சார்புகளுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்ற போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த கூட்டம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு உரிய முறையில் தகவலெதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை ஆசிரிய சங்கத்தைத் திட்டமிட்டுப் புறக்கணித்து எடுக்கப்பட்டுள்ள பக்கச் சார்புடைய எந்தவொரு ஒரு தீர்மானங்களுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் உடன்படப்போவதில்லை.
வடமாகாண கல்விப் பணிப்பாளரின் பொறுப்பேற்ற, திட்டமிடப்படாத, பக்கச் சார்பான இடமாற்ற நடைமுறைகளால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது.
இடமாற்ற நடைமுறைகளுக்கு வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டும் பலிகடாவாக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப் போவதில்லை.
வடமாகாண கல்விப் பணிப்பாளராக ஏழு வருடங்கள் பூர்த்தி செய்துள்ள நிலையிலும், தொடர்ச்சியாக, இடமாற்ற சபை தீர்மானங்களை மீறி, இடமாற்ற சபையின் அனுமதியின்றி, பதிலீட்டு இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களுக்குப் பல வருட காலங்களாக இட மாற்றங்களை ஒத்தி வைத்துள்ளார்.
அதேவேளை, ஒரே வருடங்களில் வழங்கப்பட்ட பதிலீட்டு இடமாற்றங்களின் போது, ஒரு பகுதியினருக்கு மீளவரும் திகதி குறிப்பிட்டும், இன்னொரு பகுதியினருக்குத் திகதி குறிப்பிடாமல் பாரபட்சமான முறையில் இடமாற்றங்களைச் செயற்படுத்தி இருக்கின்றார்.
ஒரே பகுதி இடமாற்றங்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் மூலம் பாரபட்சங்கள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, கோவிட் - 19 தொற்று காலத்தின் நெருக்கடி நிலையில் நாடு இருந்த பொழுதில், அந்த காலகட்டத்தில், இடமாற்ற சபையின் அனுமதி பெறப்படாமல் ஒருசிலருக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த மாவட்டத்துக்கு முறையற்ற வகையில் இட மாற்றங்களை வழங்கியுள்ளார்.
மருத்துவக் காரணங்களுக்காகவும், குடும்ப நெருக்கடிகளுக்காகவும் தமது சொந்த வலயங்களிற்குத் தற்காலிக இணைப்பு கோரி நிற்கும் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்குக் கூட, பல இழுத்தடிப்புகளை வடமாகாண கல்விப் பணிப்பாளர் செய்து வருகிறார்.
யாழ். மாவட்டத்திலிருந்து, வெளிமாவட்ட சேவை எதனையும் செய்திராத பலரைத் தொடர்ச்சியாகப் பாதுகாத்து பக்கச்சார்பான இடமாற்ற நடைமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றார்.
இவ்வாறான , பக்கச்சார்பான செயற்பாடுகளால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் முறையற்ற இடமாற்ற நடைமுறைகளால் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை.
எனவே ஆசிரிய இட மாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட
பாரபட்சமான தீர்மானங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும்
என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
