நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (photos)
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வடபகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு, இன்று (20-01-2023) நண்பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளில் கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரம் போட்டியிடுவதற்கான வேட்புமனு சுயேட்சைக் குழு தலைவர் ஸ்டிபன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
யாழ்ப்பாணம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் இன்று (20.01.2023) தாக்கல் செய்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள 04 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இன்று (20.01.2023) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல உள்ளூராட்சிமன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாக
சட்டத்தரணி ந.காண்டீபன்
தெரிவித்துள்ளார்.
செய்து: தீபன்
வவுனியா
வவுனியாவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று (20.01.2023) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி சபேசன் கணேசநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
செய்தி: ஷான்
அம்பாறை
இதற்கமைய அம்பாறை - இறக்காமம், அக்கரைப்பற்று மாநகர சபை, திருக்கோவில் , அட்டாளைச்சேனை, தமண, நாமல் ஓயா,காரைதீவு ஆகிய 07 உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தேசிய மக்கள் சக்தி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல். ஜீ. வசந்த பியதிஸ்ஸ தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை இன்று (20.01.2023) செலுத்தியுள்ளன.
இதன்படி நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர் ,ஆலையடிவேம்பு ,திருக்கோவில் ,பொத்துவில் ,உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதுடன் மாலை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்டுப்பணத்தை வைப்பிலிட்ட நாள் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சுமார் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
செய்தி: பாரூக் ஷிகான்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,தேசிய மக்கள் சக்தி,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பனவும் சுயேட்சைக்குழுவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் மற்றும் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனு மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியபோதும் இரண்டு சபைகளுக்கான வேட்புமனுக்கள் மாத்திரமே இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது.
பருத்தித்துறை நகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன், தீபன் திலீசன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
வவுனியா
வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி இன்று (20.01) வேட்புமனுத்தாக்கல் செய்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னனி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அதன் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட செயலாளர் எஸ்.தவபாலன் அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
யாழ்.மாவட்டம்
யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் சில சுயேட்சைக்குழுக்கள் என்பன செலுத்தின.
யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் தாக்கல் செய்தது.