நாங்கள் விரும்பாமல் அரசியலிலிருந்து யாரும் எங்கள் ஒரு முடியை கூட நகர்த்த முடியாது : எஸ்.வியாழேந்திரன் (VIDEO)
என்னை காணாமல் போய்விடுவார்கள் என்று கூறினார்கள் ஆனால் அவ்வாறு கூறியவர்களே இன்று காணாமல் போய்விட்டார்கள் எனவும் நாங்கள் விரும்பாமல் அரசியலிலிருந்து யாரும் எங்கள் ஒரு முடியை கூட நகர்த்த முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran ) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதிய கோட்டை முனை விளையாட்டுக் கழகம் தைப்பொங்கலை முன்னிட்டு நடாத்தும் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுபோட்டி இன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பிரகாஸ் தலைமையில் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலத்தில் ஏற்றத்தாழ்வுகளும் பாரபட்சங்களுமே வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதில் காட்டப்பட்டுவந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் சகல துறை சார்ந்தும் சமனான வேலைப்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது.
இலங்கையில் உள்ள அனைத்து பிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராமிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு சகல கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் சமனாக நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடிந்தளவுக்கு நாங்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அதில் அதிகளவான முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது என்னை வெற்றி பெறமாட்டேன் என மிகவும் குறைவாக பேசினார்கள். ஆனால் மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றிபெற்றேன்.
அதன் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போது வரலாற்றிலேயே வெற்றி பெற முடியாது என கூறினார்கள். அந்த சரித்திரத்தையே உடைத்து எறிந்தோம் நாங்கள். தீர்மானிக்ககூடிய, பலமானவர்களாக எங்களை நாங்கள் கட்டமைத்து வருகின்றோம் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.