எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 21 ஐ எதிர்க்க முடியாது: விஜேதாச ராஜபக்ச திட்டவட்டம்
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோருக்கு வேலிகட்டும் 21ம் திருத்தச் சட்டத்தை எந்தவொரு நாடாளுமன்று உறுப்பினரும் எதிர்க்க முடியாது என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அமரபுர நிகாயவின் மகாநாயக்க தேரர், அக்கமஹா பண்டித சங்கைக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரரை சந்தித்த பின்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ராஜகிரிய களபளுவாவ, கோதமி மாவத்தையில் உள்ள தபோவன விகாரையில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.
பொருளாதார சரிவை சந்தித்த இலங்கை
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜேதாச, நாடு தற்போதைக்கு பாரிய பொருளாதார சரிவொன்றை எதிர்நோக்கியுள்ளது. இதில் இருந்து மீண்டு வர நிலையான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும்.
அதனை முன்னிட்டே அரசியலமைப்பின் 21ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதனை எதிர்க்க எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நியாயமான காரணங்கள் இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட அமரபுர நிகாயவின் மகாநாயக்கர் சந்திரசிறி தேரர், நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.