செயற்பாட்டு அரசியல் குறித்து மஹிந்த சமரசிங்கவின் தீர்மானம்
மீண்டும் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு சிறிதும் இல்லை என அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் ஐந்து ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவித அழுத்தமும் இருக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தூதுவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய மஹிந்த சமரசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோதே இக்கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுத்தர முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரிகளை 10% என்ற வரம்பிற்குள் தக்கவைக்க முடிந்ததுடன், அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகாப்டர்களை இலங்கைக்குப் பெற்றுத்தர முடிந்தது என தெரிவித்துள்ளார்.
27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியுள்ள போதிலும், இனிவரும் காலங்களில் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் உதவி கோரினால், தனது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் நேரடி அரசியலில் இருந்து விலகியிருப்பதால், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜதந்திர சேவையின் போது மஹிந்த சமரசிங்க ஆற்றிய மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.