இலங்கையில் இனவழிப்பு விவகாரம்! கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பு
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக கூறவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இனவழிப்பு
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக கண்டறியப்படவில்லை என கனடா, இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.
எனினும் கனேடிய வெளிவிவகார அமைச்சின் நிலைப்பாட்டுக்கும் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது.
கனடாவின் பிரம்டன் நகர பேரவையினால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி இனவழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
மாநகரசபைகள், மாகாண அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து சுயாதீனமானவை எனவும், இலங்கை இனவழிப்பு குறித்த அவற்றின் நிலைப்பாடு மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனேடிய பிரதமரின் கருத்து
எவ்வாறெனினும், கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற தொனியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதியை தமிழ் இனவழிப்பு தினமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. இது தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கையில் தமிழர் இனவழிப்பு இடம்பெற்றதாக கண்டறியப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
