புர்கா மற்றும் நிகாப் ஆடைகள் மீது தடை அமுல்படுத்தப்படவில்லை! அது ஒரு திட்டம் மட்டுமே
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் ஆடைகள் மீது தடை அமுல்படுத்தப்படவில்லை. அது ஒரு திட்டம் மட்டுமே என்று வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியது.
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான திட்டம் தொடர்பாக அண்மையில் வெளியான அறிக்கைகள் தொடர்பில் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தடையை விதிக்க அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை என்று வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்கே தெரிவித்துள்ளார். இது வெறுமனே ஒரு திட்டம், இது விவாதத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக புர்கா மற்றும் நிகாப் தடை செய்ய முன்மொழிகின்ற அமைச்சரவை தாளில் கையெழுத்திட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.