பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவது அவசியம் - நிமல் லான்சா
இலங்கையின் பொருளாதார மீளுருவாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவரான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவது அவசியம் என்று கிராமப்புற வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சியில், பசில் ராஜபக்ஷ முக்கிய பங்கு வகித்தார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கின் வசந்தம், கிழக்கின் புதிய உதயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அவர் பங்களித்தார்.
இன்று, கோவிட் - 19 நெருக்கடி இலங்கையையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. உலக எண்ணெய் விலை உயர்வு இலங்கையில் மீன்வளம் உட்பட பல துறைகளை பாதித்துள்ளது.
இந்த நேரத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும்.
இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று லான்சா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் சுமார் 40 பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நேற்று மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகூனின் தெஹிவளை இல்லத்தில் சந்தித்து பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வேண்டும், பின்னர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி, இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.