சொந்தமாக எண்ணெய் இருந்தும் தவிக்கும் நைஜீரியா: பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!
ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவில், பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஆபிரிக்காவிலேயே மிகப்பெரியதான, நாளொன்றுக்கு 6.5 இலட்சம் பீப்பாய்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட 'டாங்கோட்' (Dangote) சுத்திகரிப்பு நிலையம் இந்த ஆண்டு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தும், அந்நாட்டு மக்களுக்கு விலை குறைப்பு என்ற பலன் கிடைக்கவில்லை.
எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023-ல் ஜனாதிபதி போலா டினுபு எரிபொருள் மானியங்களை இரத்து செய்ததைத் தொடர்ந்து, தற்போது நைஜீரியர்கள் 65 சதவீத விலை உயர்வைச் சந்தித்து வருகின்றனர்.

இது ஆபிரிக்காவின் முக்கிய பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விலை உயர்வாகும்.
நைஜீரியா அதிகப்படியான மசகு எண்ணெயைத் தயாரித்தாலும், அதன் பெரும் பகுதி சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக (Oil-backed loans) முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், டாங்கோட் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான மசகு எண்ணெயில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நைஜீரியாவால் உள்நாட்டில் வழங்க முடிகிறது.
கடும் அதிருப்தி
மீதமுள்ள தேவையைப் பூர்த்தி செய்ய, போர்ச் சூழலால் விலை உயர்ந்துள்ள வெளிநாட்டு மசகு எண்ணெயையே அந்த நிறுவனம் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

மாதம் 15 சரக்குக் கப்பல் (Cargoes) அளவு மசகு எண்ணெய் தேவைப்படும் நிலையில், 5 கப்பல்கள் மட்டுமே உள்நாட்டில் கிடைப்பதாக டாங்கோட் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும் விதமாக, நைஜீரியாவிடம் அவசர காலத்திற்கான 'வியூக எரிபொருள் கையிருப்பு' (Strategic Fuel Reserve) எதுவும் இல்லை. இத்தகைய கையிருப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் அந்நாட்டு அரசு இன்னும் தொடங்கவில்லை.
மசகு எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், முறையான நிதி மேலாண்மை மற்றும் சுத்திகரிப்புத் திட்டமிடல் இல்லாததால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நைஜீரிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்து வருகின்றன.
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முதலீட்டாளர்களைக் கவர்ந்தாலும், தற்போதைய விலை உயர்வு அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.