ரூபாவிற்கு டொலர்களை மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிரமம்! மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்
வங்கிகளினால் ரூபாவிற்கு டொலர்களை மாற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தும் எந்தவொரு ஆலோசனையையும் மத்திய வங்கி வழங்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வங்கிகளால் டொலர்களை ரூபாவாக மாற்றுவதில் உள்ள சிரமம் குறித்து அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மத்திய வங்கி ஆளுநரிடம் வினவிய போதே அதற்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு தேவையான அறிவுரை
அதன்படி, இது குறித்து ஆய்வு செய்து வங்கிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளதால், கடனைப் பெற்றுக்கொண்ட சிலருக்கு தமது சம்பளம் முழுவதையும் கடன் தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய வட்டியை சலுகைக் காலத்தில் செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள நிதிக் கொள்கைகளின் மூலம், அடுத்த வருட இறுதிக்குள் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதமாகக் குறைவடையும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.