இலங்கையில் புதிய சர்வதேச பல்கலைக்கழகம்: அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட தகவல்
கொத்மலை பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான அறிக்கையை ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தயாரித்துள்ளார்.
இந்த நிர்மாண பணிகளுக்காக கொத்மலை பிரதேசத்தில் சுமார் 400 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ருவான் விஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
அமெரிக்கத் தூதரகம்
இந்நிலையில், இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், காணி ஒதுக்கிய பின்னர் இந்தப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக ருவான் விஜயவர்தன தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களின் ஆதரவும் குறித்த பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் என்று தூதரகம் உறுதியளித்துள்ளதாகவும், இது தொடர்பான திட்ட அறிக்கை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |