சீனாவில் புதுவகை கோவிட்...! கோடிக்கணக்கானோருக்கு ஏற்படப்போகும் பேராபத்து
சீனாவில் புதுவகை கோவிட் தொற்றால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து உருவான கோவிட் தொற்றானது உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தங்கள் நாட்டில் கோவிட் தொற்றானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையைச் சீனா மறைப்பதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
தற்போது உலகில் கோவிட் தொற்றின் தாக்கம் பாரிய அளவில் குறைந்துள்ள நிலையில், சீனாவுக்கு கோவிட்டால் மீண்டும் ஆபத்து வரப்போவதாகக் கூறப்படுகின்றது.
6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம்
அதாவது, வீரியம் மிக்க புதிய வகை கோவிட் அலைக்குச் சீனா தயாராகி வருகிறது என்று மூத்த சுகாதார ஆலோசகரின் அறிக்கையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய கோவிட் அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என்றும் இந்த வகை தொற்றால், நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் காரணமாக அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணி
கடந்த ஏப்ரல் முதல் ஒமிக்ரோன் மாறுபாட்டால், சீனாவில் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதியில் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோரும் பாதிக்கப்படுவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சீனாவில் புதிய கோவிட் அலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |