நாடாளுமன்றில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துங்கள்! ரணிலிடம் சட்டத்தரணிகள் வலியுறுத்தல்!
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூடிய விரைவில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான தனது இயலுமையை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளத்தின் செயற்குழு கோரியுள்ளது.
பொதுமக்களின் நலன்களுக்காக ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தை உருவாக்க அவர்; முயற்சிக்க வேண்டும் என்று சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே தாம் வெளியிட்டிருந்த முன்மொழிவுகளை மேற்கோள்காட்டியுள்ள சட்டத்தரணிகள் சம்மேளனம், நாடாளுமன்றத்தின் இருப்பை மட்டும் நம்பாமல், நாடாளுமன்றத்திற்குள் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரதமரை நியமிக்க வேண்டியது அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட முன்மொழியப்பட்ட முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தெளிவான காலக்கெடுவை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.
மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை, அதிருப்தி மற்றும் துன்பம் நிறைந்த இந்த காலகட்டத்தில், புதிய அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும் தொலைநோக்கு நோக்கத்துடனும் செயல்படுவது இன்றியமையாதது என்றும் சட்டத்தரணிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.