மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்கான புதிய வழிமுறை
மணல் கடத்தல்காரர்களிடமிருந்து மணல் கடத்தலைக் காப்பாற்றவும், கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுவதற்கும் மணல் உரிமம் வழங்குவதற்கும் ஒரு சிறப்புத் திட்டம் தயாரிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (10) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த மணல் அகழ்வின் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான முடிவுகளை எடுக்க ஆளுநரின் தலையீட்டில் ஸூம் தொழில்நுட்பம் மூலம் கூட்டம் நடைபெற்ற போதே அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தற்போது நாட்டிற்குத் தேவையான மணல் பொலன்னறுவை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து பெறப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பல முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழுந்திருப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். திருகோணமலை மாவட்டத்தில் 300 மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு மட்டும் 1300 உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் ஊழல் நிறைந்த அதிகாரிகள் தனது மாகாணத்திற்கு வருவதாகும். அரசியல் அதிகாரிகளின் குறிப்பிட்ட ஆதரவுடன் இத்தகைய அதிகாரிகள் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு குழு மூலம் உரிமம் வழங்குவதே இதற்கான சிறந்த தீர்வு எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதாக நாடாளுமன்றத்தில் அண்மையில் குற்றம் சாட்டியது போன்று எந்த வெளிநாட்டிற்கும் மணல் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான மணல் இருப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் திணைக்களம் வனத்துறை, புவியியல் மற்றும் சுரங்க பணியகம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.