மன்னார் - நானாட்டான் பிரதேசசபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்
நீண்ட நாட்களாக வெற்றிடமாக காணப்பட்ட மன்னார் - நானாட்டான் பிரதேசசபையின் உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நானாட்டான் பிரதேசசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருக்கான வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினராக மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த பெனடிற் யாக்கோப் பிள்ளை (Benadir Jacob Pillai) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த புதிய உறுப்பினர் சட்டத்தரணி ம.ரூபன்ராஜ் (M.Rubanraj) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நானாட்டான் பிரதேசசபை தெரிவத்தாட்சி அலுவலர் க.விமலரூபன் (K.Vimalarupan) கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் கடந்த வருடம் சுகயீனம் காரணமாக நானாட்டான் பிரதேசசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாகூர் மீரா ராசிக் பரிது (Nagore Meera Rasik Paridu) மரணம் அடைந்த நிலையில் அவரின் வெற்றிடம் நீண்ட நாட்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அந்த வெற்றிடப்பதவிக்கு பெனடிற் யாக்கோப் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.