மின் கட்டணம் குறைப்படுமா..! விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இலங்கையின் மின்சக்தி மாற்றத்திற்கு வெறும் மின்கல உற்பத்தி சேமிப்பை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, மாறாக சூரியசக்தி மற்றும் காற்று மின் உற்பத்தி விரிவாக்கத்துடன் தேசிய மின்கட்டமைப்பில் பாரிய மறுசீரமைப்புகள் அவசியம் என வலுசக்தி பிரதி அமைச்சர் இல்யாஸ் அர்காம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மின்கலங்கள் பயன்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்கலங்கள் என்பது மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு ஊடகம் மாத்திரமே ஆகும். நாட்டுக்குக் கூடுதல் சூரிய மற்றும் காற்று மின் உற்பத்தி மூலங்கள் தேவைப்படுகிறது.
தற்போது சுமார் 300 மெகா வோல்ட் காற்று மின் உற்பத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மன்னாரில் காற்று ஆலைகளுக்கான விசிறிகள் வந்தடைந்துள்ளன.

இதன் கீழ் மன்னாரில் 50 மெகாவோல்ட் திட்டமும், முள்ளிக்குளத்தில் 50 மெகாவோல்ட் வீதம் இரு திட்டங்கள் மூலம் 100 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
மேலும், நீர்நிலைகளில் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி கல அமைப்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மின்சாரத்துறையின் செலவுகளை கட்டுபடுத்த புதிய திட்டம்
இதன் மூலமும் கூரை மற்றும் தரைவழி சூரியசக்தி திட்டங்கள் மூலமும் 200 முதல் 250 மெகா வோல்ட் வரை தேசிய கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து 150 மெகா வோல்ட் காற்று மின் திட்டத்திற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த அனைத்துத் திட்டங்களின் ஊடாகவும் எதிர்வரும் 18 மாதங்களுக்குள் சுமார் 300 மெகாவோல்ட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், மின் உற்பத்தித் திறன் அதிகரித்தாலும், அதனைத் தேவையான இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தற்போதைய மின் விநியோகக் கட்டமைப்பில் பாரிய சவால்கள் காணப்படுகிறது.
உற்பத்தித் திறன் இருந்தும் விநியோகிக்க முடியாவிட்டால் பலனில்லை என்பதால், புதிய மின் விநியோகக் கட்டமைப்பு கோபுரங்களையும் விநியோக இணைப்புகளையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
மின்சாரத் துறையின் மொத்தச் செலவில் 80 சதவீத உற்பத்திச் செலவாகவே உள்ளதால், மின் உற்பத்திக்கான செலவையும் விநியோகச் செலவையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே நுகர்வோருக்கான ஒட்டுமொத்த மின் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.