சம்பந்தன் தொடர்பான அனைத்து பொறுப்பிலிருந்தும் குகதாசன் அதிரடி நீக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தமது பிரத்தியேக இணைப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்கொண்டு செல்வதற்காகவும் கடந்த ஐந்தாம் திகதி தொடக்கம் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முன்னாள் நகர பிதா என்.இராசநாயகம் என்பவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தன் அனுப்பிய கடிதம்
இதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கும் சம்பந்தன் ஒப்பம் இட்டு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தன் உடல் நிலை காணரமாக தற்போது கொழும்பில் தங்கியுள்ளதால் அவரின் கடமைகளை கனடா குகதாசன் மேற்கொண்டிருந்தார்.
ஆனால் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் தெரிவில் சம்பந்தனால் முன்மொழியப்பட்ட வேட்பாளர் பெயர்களை குகதாசன் நிராகரித்திருந்தார்.
எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலின் படி குகதாசன் செயற்பட்டதாக பின்னர் சம்பந்தனிற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அறிக்கை தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை
குகதாசனுடன் தமது தொடர்புகளை துண்டித்த சம்பந்தன் தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் திருகோணமலை உள்ளூராட்சிசபை வேட்பாளர் தெரிவு சம்பந்தமாக ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில் புதிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை அண்மையில் சுமந்திரன் - குகதாசன் தரப்பினர் சந்தித்திருந்தனர். இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் பலர் இரா.சம்பந்தனிடம் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழரசு கட்சியின் செயற்பாட்டை மீறி தனி அணி செயற்பட முனைவதாக பலரும் விசனம் வெளியிட்டதாக அறிய முடிகிறது.
இதையடுத்து தற்போது ஜனாதிபதி ரணிலுடன் தமது இணைப்பாளர் ஒருவரை நியமிக்க விசேட அனுமதி பெற்ற பின்னர் இராசநாயகம் என்பவரை தமது கடமைகளுக்காக எதிர்வரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் கலந்து கொள்ளவும் உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
இதேவேளை குகதாசன் இனி சம்பந்தனின் இணைப்பாளர் பதவியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |