நேபாள அரசாங்கத்திற்கே மோசடி செய்த இலங்கை அதிகாரிகள்!
நேபாள தூதரகம் ஒன்றை அமைப்பதற்காக சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் நேபாள அரசாங்கத்தால் வாங்கப்பட்ட காணி ஒன்று தனியாருக்கு இரண்டு முறை விற்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை நேபாள கணக்காய்வாளர் நாயகத்தின் 63 ஆவது வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி குறித்த சொத்தின் உரிமையிலும் பாதுகாப்பிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜதந்திர ரீதியிலான சிக்கல்கள்
இலங்கையில் தூதரகக் கட்டிடம் ஒன்றை அமைக்கும் நோக்கில் நேபாள அரசு 1989 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 1.5 ஏக்கர் காணியை 360,000 அமெரிக்க டொலர் செலுத்தி வாங்கியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அத்தூதரகக் காணியின் ஒரு பகுதி 1994 ஆம் ஆண்டில் தனியாருக்கு இரண்டு முறை விற்கப்பட்டதாகக் கூறப்படுவதுடன் இது அதன் உரிமை தொடர்பாக பாரிய சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மோசமான நிர்வாக மேற்பார்வை மற்றும் சட்டபூர்வமான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தவறு ஆகியவையே இந்த சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் நடப்பதற்கு இடமளித்துள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
உடனடியாக முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்தச் சொத்தை மீண்டும் மீட்டெடுப்பது அல்லது அதன் முழு உரிமையை தம்வசப்படுத்த நேபாளத்திற்கு கடினமாகிவிடும் என்று நேபாள அதிகாரிகள் கூறியுள்ளனர்.