நீர்கொழும்பு சிறையில் தற்போதைய நிலவரம்.. உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண நடவடிக்கை
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியைப் பாதுகாக்க ஏராளமான பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருந்த போதிலும், பெண் கைதிகள் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர், நேற்று இரவு (06) நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவிய சூழலைக் கவனித்த பின்னர் ஊடகங்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பலரின் நிலை கவலைக்கிடம்..
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதலில் படுகாயமடைந்த 20 பேர் மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 58 பேர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5ஆம் திகதியன்று, நீர்கொழும்பு சிறைச்சாலையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு குழுவிற்கும், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்த ஒரு குழுவிற்கும் இடையே வன்முறைச் சம்பவம் வெடித்தது. இரு தரப்பிலும் கைதிகள் காயமடைந்தனர்; இதில் 2 கைதிகள் உயிரிழந்தனர், மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
உயர் பாதுகாப்பு
தொடர்ந்து, நேற்று (06) காலை, நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் ஒரு மோதல் வெடித்தது. அப்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரிகளை கைதிகள் தாக்கினர்.

100க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் காயமடைந்ததாகவும், 7 சிறை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரம் குறித்து கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் குறித்து பொலிஸார் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறையில் தங்கியிருந்த சுமார் 700 கைதிகளை பாதுகாப்பு கருதி அங்குனகொலபெலஸ்ஸ, தும்பரா, அனுராதபுரம், பொலன்னருவ மற்றும் குருவிட்ட சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடையாளம் காண வாய்ப்பு
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறைப்படியான மற்றும் விரிவான விசாரணை நடத்திய பின்னர், அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையில், நேற்று கூடிய அமைச்சரவையால் சம்பந்தப்பட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த நபர்களுக்கான பிரேத பரிசோதனைகள் இன்று (07) நடத்தப்பட உள்ளன. இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் புகைப்படங்கள் மருத்துவமனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு மருத்துவமனை தெரிவித்துள்ளது.