நயினாதீவில் மருத்துவமனை பணிப்பாளர்களின் அசமந்தத்தால் ஒருவர் உயிரிழப்பு
நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் ஒருவர் நேற்று(24) இரவு உயிரிழந்துள்ளார்.
இவர் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பணியாளர்களால் உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார்(வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பிற்கான காரணம்
நயினாதீவு இறங்குதுறையில் நேற்று மாலை வந்தடைந்த பயணிகள் படகில் வந்த குடும்பத்தலைவர் அங்கிருந்து லாண்ட்மாஸ்டரில் வீடு செல்லும் போது ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதி வளைவில் வாகனம் திரும்பிய போது நிலைதடுமாறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.
அவரை உடனடியாக நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அங்கிருந்த பணியாளர்கள் அனுமதிக்க மறுத்துள்ளதோடு அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சுத்தம் செய்து அழைத்து வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் காலதாமதம் ஏற்பட்டு குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.