இந்தியன் இழுவை மடி படகுகளை கைது செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை! எழுந்துள்ள குற்றச்சாட்டு..
இந்தியன் இழுவை மடி படகுகள் வடமராட்சி கிடக்கு கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு பத்து மணி 10.00 அளவில் உள் நுழைந்து சட்ட விரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்டதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பி.அலஸ்ரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்த அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியன் இழுவைமடி படகுகள் நேற்றுமுன்தினம் இரவு பத்து மணியளவில் கரைக்கு அருகாக வந்து தொழிலை மேற்கொள்கிறார்கள் எமது கடல் வளத்தை அவர்கள் அழிப்பதை கரையிலிருந்து நாங்கள் கண்காணிக்க கூடியதாக இருக்கிறது.
இழுவைமடி தொழில்
அவர்கள் இழுவைமடி தொழிலை செய்து கொண்டிருக்கின்ற அதேவேளை உயர்வாக கடற்படை படகுகள் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் இந்திய படகுகளை கைது செய்ய முயற்சிக்கவில்லை எங்களுடைய வளங்களை அழிப்பதற்காகவே இந்த செயற்பாடு திட்டமிட்டு நடப்பதாக நான் கருதுகிறேன்.
இந்திய இழுவைமடி படகுகளை கைது செய்வது டோராவிற்கு பெரிதான விடயம் அல்ல. ஒரு சில நாட்களுக்கு முன்பு சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களையும் தேடுவதற்காக திருகோணமலையில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட டோரா படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வந்து இரவு பகலாக காணாமல் போன கடற் படையினை ஆர்வமாக தேடினார்கள் நாங்கள் இதனை தவறு என்று கூறவில்லை ஆனால் என்ன கேட்கிறோம் என்று சொன்னால் நமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு இருக்கிறது.
கடற்படை வீரர்களில் ஆர்வம் காட்டுவது போன்று ஏன் இந்திய இழுவைமடி படகுகளை கைது செய்ய ஆர்வம் காட்டவில்லை இது திட்டமிட்ட சதி என்றே நினைக்கின்றோம்.
பல லட்சம் ரூபாய் இழப்பு
வடக்கு கிழக்கு கடல் வளத்தை அழிப்பதற்காக எங்களுடைய அரசாங்கமும் சேர்ந்து இந்த செயற்பாட்டை முன்னெடுக்கிறது கடலோடு எங்களுடைய இனமும் சேர்ந்து அழிகிறது இது தொடர்பாக நாங்கள் பலமுறை முறையிட்டோம் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை இந்திய படகுகளின் வரத்தால் எங்களுடைய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுடைய தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடற்றொழிலாருக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரணம் என்று கூறி எவ்வளவு நிதி உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசத்தால் நாள்தோறும் பல லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை இழக்கும் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை.
இந்த இந்திய படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்று சொன்னால் அவர்களால் அளிக்கப்படும் எங்களுடைய மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எமது மக்களை எமது இனத்தை இந்த அரசாங்கம் எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் நேற்று கடலுக்குச் சென்ற பல கடற்றொழிலாளர்களுடைய வலைகள் காணாமல் போய் உள்ளது. இழுத்து செல்லப்பட்டுள்ளது.
நாளாந்தம் இது தொடர்பாக நாங்கள் அதிகாரிகளுக்கு அறிவித்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை இந்திய இழுவை மடி படகுகளின் வரத்தால் எமது வளம் அழிந்து கொண்டிருப்பது ஒரு திட்டமிட்ட மறைமுக இன அழிப்பாகவே பார்ப்பதாக மேலும் தெரிவித்தார்.