ஜனாதிபதி தனது திட்டத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் - கிளிநொச்சியிலிருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கையானது சுமார் 71 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் இயற்கை உரமானது விவசாயிகளின் 10 வீதத்தைக் கூட பூர்த்தி செய்யக் கூட போதுமானதாக மாவட்டத்தில் கிடைப்பதில்லை என இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரம் வழங்கக் கோரி விவசாயிகள் இன்று (15) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
100 வீத சேதனப் பயிர்ச் செய்கை திட்டமானது குறைந்தது ஐந்து ஆண்டுகள் திட்டமாகவேனும் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
அதுவே நடைமுறைக்குச் சாத்தியமானது. மாறாக மூன்று நான்கு மாதங்களில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவது என்பது 80 வீத நடைமுறைச் சாத்தியமாகவே காணப்படும்.
எனவே இதனால் விவசாயிகள் முழுமையான அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இது நாட்டில் உற்பத்தி பெருக்கத்தைக் குறைத்து பஞ்சத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.
ஜனாதிபதி சேதன உரப் பயன்பாட்டுத் திட்டத்தை விவசாயிகளின் நலன்கருதி மீள பரிசீலனைக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விவசாயிகளால் மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக
அரச அதிபர் ஸ்ரீமோகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.