பாலஸ்தீனத்தில் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ள வீதி!
இலங்கை தொடர்ந்தும் பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவளித்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் ராமல்லா நகரில் உள்ள வீதியொன்றில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் யூசுப் அல்- ஒத்தாய்மீன் (Yusuf al-Ottaymeen )தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் அடங்கும். தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை - பாலஸ்தீன நட்புறச் சங்கத்தை ஆரம்பித்து 25 வருடங்களாக அதன் தலைவராக செயற்பட்டுள்ளார்.
இலங்கைக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இருந்து வரும் நீண்டகால நெருங்கிய உறவுகள் குறித்தும் ஒத்தாய்மீன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கோவிட் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை சம்பிரதாயபூர்வமாக அடக்கம் செய்ய இடம் வழங்க நடவடிக்கை எடுத்தமை குறித்தும் அவர் பாராட்டியுள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு அடிப்படைவாதம், வன்முறை மற்றும் வைராக்கியத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக கூறியுள்ள அவர், பிரஜைகளுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தி உலகம் முழுவதும் பொய்யான தகவல்களை பரப்பி, சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் தவறான செய்திகளை வழங்குவது அதிகரித்துள்ளதாகவும் யூசுப் அல்- ஒத்தாய்மீன் சுட்டிக்காட்டியுள்ளார்.