நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) கடனடைப்புக்கான பரேட்டே சட்டம் எதிர்வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இந்தத் தொழில்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இச்சட்டத்தின் கீழ், 50 மில்லியன் ரூபாவிற்கு கூடுதலான கடன் நிலுவையுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியான்மையாளர்களிடமிருந்து வங்கிகள் நேரடியாக கடனை மீட்டெடுக்க அதிகாரம் பெறுகின்றன.
இது நூற்றுக்கணக்கான தொழில்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்று நாமல் ராஜபக்ஷா எச்சரித்துள்ளார்.
தனது X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட செய்தியில், அரசாங்கம் தலையீடு செய்து பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் தொழில்களுக்கு நிவாரண திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
நாடெங்கும் ஏராளமான தொழில்கள் மூடப்படும் அபாயம், வேலை இழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு, அதனுடன் நாட்டின் மீட்சி பாதையில் இருக்கும் பொருளாதாரத்துக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்றுமதி சந்தை மந்தமான நிலையிலும், உலக பொருளாதாரமும் நிச்சயமற்ற நிலையில், சிறு மற்றும் நடுத்தர முயற்சியான்மையாளர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்தத் தளர்வு கிடைக்காவிட்டால், ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கைகள் ஆபத்தில் சிக்கும்,” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய வங்கியையும், வணிக வங்கிகளுடனான கலந்துரையாடல் மூலம் பரேட்டே சட்ட அமலுக்கு உரிய காலவரம்பை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.