நாமலின் அதிரடி நடவடிக்கை! தெளிவுப்படுத்தும் மனோ கணேசன்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர்களின் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் இந்த கருத்தைத் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் சில விடயங்களை பதிவு செய்துள்ளார்.
"நீண்டகாலம்" சிறையில் இருக்கும், தமிழ் கைதிகள் விடுதலை பற்றி கடந்த 21ஆம் திகதி அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சபையில் விசேட அறிவிப்பு செய்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், ஸ்ரீதரன் ஆகியோரது முன்னெடுப்பில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி, வெளி விவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தோம்.
அதன் தொடர்ச்சியே இது என நேற்று அமைச்சர் தினேஷ் என்னிடம் கூறினார்.
இவை நல்ல நிகழ்வுகளே..! சில தினங்களுக்கு முன் வந்தஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கூறிய கருத்து மற்றும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அவர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய "வாய்மொழி அறிக்கை" ஆகியவை தான், ராஜபக்ச அரசாங்கத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம்.
ஆனால் இவற்றை சொல்லி நாம் இன்று "காரசாரமான அரசியல்" செய்ய தேவையில்லை. அதேபோல், சமூக ஊடகங்களில் "அரசாங்கத்திற்கு எதிராக எழுதினார்கள்" என சமீப காலங்களாக பயங்கரவாத தடை சட்டம் மூலம், கைதாகும் நபர்கள் பற்றியும் பேச வேண்டும்.
நீதி அமைச்சர் அருகில் இருக்கும்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் எதற்காக இதைப்பற்றி பேச வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.
ஆனால் இவற்றை எல்லாம் காரணங்களாக கூறி, பல்லாண்டுகளாக சிறையில் வாடும் "நீண்டகால" கைதிகளின் விடுதலையை குழப்பி விடக்கூடாது. எமது நல்லாட்சியின் போது, 2015ஆம் ஆண்டுக்கும் - 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் சுமார் 100 தமிழ் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டார்கள். இதை நமது அரசாங்கம் சத்தமின்றி செய்தது.
அதேபோல் இதையும் சத்தமின்றி செய்ய வேண்டும்.
ஏறக்குறைய தமது இளமைக்காலம் முழுவதையும் சிறைகளில் கழித்து விட்ட இந்த "மனிதர்கள்" படிப்படியாக விடுவிக்கப்பட கூடிய சூழலை பொறுப்புடன் பொறுமையாக ஏற்படுத்துவோம்.
அதேபோல் தொடர்ந்தும் எமது அழுத்தங்களை கவனமாக பிரயோகிப்போம்.