உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கும் நாமல் எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டைக் காலி செய்யத் தயார்
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் தனது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த தயாசிறி ஜயசேகர, வீட்டைக் காலி செய்யுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டைக் காலி செய்யத் தயார் என அங்கத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச எம்.பி தவிர மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.