யோஹானியின் பிரபலம் இந்திய உளவுப் பிரிவின் சூழ்ச்சி - நளின் டி சில்வாவின் தகவல்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இணையத்தள வலையொளி ஒன்றில் வெளியாகியுள்ள பேட்டியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்குள் இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்குவதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.
இந்தியா மீது இலங்கை மக்கள் அதிருப்தியுடன் இருப்பது இன்று நேற்றல்ல. மன்னன் விஜயன், குவேனி காலத்தில் இருந்தே இலங்கை மக்கள் இந்தியா மீது அதிருப்திக் கொண்டுள்ளனர்.
அந்த அதிருப்தியை போக்க இந்தியா பாடகியை தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்கு திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர், அமிதாப் பச்சன் மாத்திரமல்ல, சல்மான் கான் போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.
இந்திய திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர்.
இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
