கோட்டாவின் நிர்வாகம் தொடர்பில், சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரை உதாரணம் காட்டிய எதிர்கட்சி உறுப்பினர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகம் தொடர்பாக நாடாளுமன்ற சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரை உதாரணம் காட்டிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின்போது உரையாற்றிய, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கோட்டாபய ராஜபக்சவின் தோல்வியடைந்த நிர்வாகம் தொடர்பாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாக குறிப்பிட்டார்.
எதிர்கட்சியை காட்டிலும் அரசாங்கத்தில் உள்ள பெரும்பான்மையானோர் கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தில் அதிருப்திகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு மூன்று காவலர்கள் மாத்திரமே அரசாங்கத்தை காப்பாற்றி வருவதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனை பார்த்து, நீங்களும் ஜனாதிபதியின் நிர்வாகத்தில் அதிருப்தி கொண்டிருக்கிறீர்கள்தானே” என்று நனின் பண்டார கேள்வி எழுப்பினார்.
எனினும் அதனை சுரேன் ராகவன், இந்த விவாதம் தம்மை பற்றியதல்ல என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து சபைக்கு தலைமை தாங்கிய சுரேன் ராகவனை உதாரணம் காட்டியமைக்காக நளின் பண்டார மன்னிப்பை கோரினார்.
இதேவேளை தெற்காசிய ஏனைய நாடுகளில் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் கடந்த இரண்டு வருடங்களில் 79வீதத்தினால் வெளிநாட்டு நாணய இருப்பு வீழ்ச்சிகண்டுள்ளதாக நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.