ஊர்காவற்துறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நயினாதீவு மக்கள்!
யாழ்ப்பாணம்- நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி - இறக்கும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதி வேண்டியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மணல் ஏற்றி இறக்கும் இறங்குதுறை தொழிலாளிகளுக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி இருந்தது.
கவனயீர்ப்பு போராட்டம்
இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் இடையில் தொடர்ந்தும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் தொழிலாளிகளின் உறவினர்கள் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு இருந்தவர்களில் இருவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பொலிஸ் நிலையத்தில் இருதரப்பினராலும் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காணாமல் போன மற்றும் ஒரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்களால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தற்பொழுது தொழிலாளிகள் தரப்பைச் சேர்ந்த எட்டு பேரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் பக்க சார்பாக நடப்பதாகவும் இதற்கு நீதி கோரியும் ஊர்காவற்துறை இறங்குதுறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

